தமிழ்நாடு

“நீதித்துறை தனது வாளை சுழற்றினால்தான்..”-நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கில் நீதிமன்றம் காட்டம்

Veeramani

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, தனது சொத்துக்கான மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்து திருவள்ளூரைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி தண்டபாணி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்ற செயல்களை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும், நீதித்துறை தனது வாளை சுழற்றினால் தான், வாழ்வாதாரமான தண்ணீருக்கு பஞ்சம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும் எனவும், நீரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

வருவாய் துறை அதிகாரிகள், இந்த ஆக்கிரமிப்புகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதற்கு உடந்தையாக இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வருவாய் நிர்வாக ஆணையரை எதிர்மனுதாரராக சேர்த்து, ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.