8 வழிச்சாலைக்காக நிலம் தராத விவசாயிகளை துன்புறுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து நில உரிமையாளர்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. நீதிபதிகள் சிவஞானம் பவானி சுப்ராயன் அமர்வில் இந்த வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகின்றன. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மரங்களை வெட்டக் கூடாது என்றும் நிலங்களை கையகப்படுத்த தடையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது. அப்போது, நில உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நிலம் வழங்க மறுப்பவர்கள் தாக்கப்படுவதாக கூறினார். அப்போது, 8 வழிச்சாலைக்காக நிலம் தராத விவசாயிகளை துன்புறுத்தக் கூடாது என்றும் கைது செய்யக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருப்பினும், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆய்வுக்குழு மூலமாகவோ அல்லது மாவட்ட சட்டப்பணிகள் ஆய்வுக் குழு மூலமாகவோ தீர்வு காணலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, வெட்டப்பட்ட மரங்களுக்கு நிகராக 1200 மரங்களை நட இருப்பதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் திட்டத்தை சட்டப்படி தொடர முடியாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.