தமிழ்நாடு

பணப்பட்டுவாடா நடந்தது உண்மை: சிக்கியது ஆவணங்கள்

பணப்பட்டுவாடா நடந்தது உண்மை: சிக்கியது ஆவணங்கள்

webteam

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா நடப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறிவருகின்றன. இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் வெளியாயின. அவருக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகியோர் பிரசாரம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், டிடிவி தினகரனின் ஆதரவாளரும் அமைச்சருமான விஜயபாஸ்கர் வீட்டில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணப்பட்டுவாடா புகாரின் பேரில் இந்தச் சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.

அவருக்குச் சொந்தமான வீடு, கல்லூரி, கல் குவாரி உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை, சென்னை உட்பட 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீடு, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதி, அதிமுக முன்னாள் எம்.பி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீடு, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டிலும் வருமானவரி சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில் எழும்பூரில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றிலும் சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதனடிப்படையில் பலகோடி ரூபாய் பணவட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வருமானத்துறை தெரிவித்துள்ளது. அந்த ஆவணத்தில், வரவு செலவுகள் அடங்கிய தகவல்கள், யார், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது, யாரிடமிருந்து பல கோடி ரூபாய் பணம் வந்தது என்பது போன்ற விவரங்கள் இருப்பதாகத் தெரிகிறது. சோதனை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இன்னும் முக்கிய ஆவணங்கள் கிடைக்கலாம் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.