நேற்று மட்டும் டாஸ்மாக் மூலம் 170 கோடி ரூபாய் மது விற்பனை நடைபெற்று உள்ளதாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “வழக்கமாக நாள் தோறும் ரூ.70கோடி முதல் ரூ.80 கோடி வரை மது விற்பனையாகும். பொங்கல், தீபாவளி, புத்தாண்டு ஆகிய முக்கிய தினங்களில் ரூ. 120 கோடி முதல் ரூ.200 கோடி வரையில் விற்பனையாகும். ஆனால் நேற்று மட்டும் 170 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை ஆகியுள்ளது.” எனத் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் 43 நாள்கள் மூடப்பட்டிருந்து. இந்நிலையில் நேற்று 3700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக்கை பொறுத்தவரை தமிழகத்தை 5 மண்டலமாக பிரித்து மண்டல மேலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதனடிப்படையில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில், சென்னை நீங்கலாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ. 37 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.34 கோடியும் என மொத்தம் ரூ.170 கோடிக்கு நேற்று மதுவிற்பனை நடந்துள்ளது.