அதீத மன அழுத்தத்தால்தான் இந்த முடிவு என் குடும்பத்தாரை அலைக்கழிக்க வேண்டாம்' என கடிதம் எழுதி வைத்துவிட்டு திருமணமாகி ஓராண்டே ஆன இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த பாலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் யுவராஜ். பி.இ.பட்டதாரியான இவர், தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமான அவருக்கு சுஜாதா என்ற மனைவியும் உள்ளார்.
திருமணம் முடிந்து ஓராண்டே ஆன நிலையில், தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த யுவராஜ் எழுதியுள்ள கடிதத்தில் 'என் இந்த முடிவுக்கு அதிக மன அழுத்தம் தான் காரணம், வேறு ஏதும் இல்லை. என் குடும்பத்தாரை அலைக்கழிக்க வேண்டாம். எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க என எழுதிவைத்துள்ளார்'. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)