முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஜூன் 20-ம் தேதி திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில் நடைபெற்றது. இவ்விழாவில், திமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.எ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசுகையில், முதல்வர் விஜயை ஒருமையிலும், மற்றொரு நடிகையுடன் தொடர்புபடுத்தியும் பேசியிருந்தார். இதையடுத்து, முதல்வர் விஜயை அவதூறாக பேசியதாக, தவெக நகர செயலாளர் செல்வம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தது.
தொடர்ந்து, அவரது முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி இன்று தள்ளுபடி செய்திருக்கும் நிலையில், முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கில், காவல்துறை அவரை தற்போது கைது செய்திருக்கிறது. இந்தசூழலில் தான், அனிதா ராதாகிருஷ்ணனின் கைதுக்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு. மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என விமர்சித்திருக்கிறார்.
தொடர்ந்து, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் திருவைக் குண்டம் எம்.எல்.ஏ மீது குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதுவரை எந்த நடவடிக்கை இல்லை எனவும் வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர் எனவும் “ஆணவம் அழிவிற்கு வழி!” எனவும் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதேபோல, இந்தக் கைது குறித்துப் பேசியுள்ள எம்.பி. கனிமொழி, ”முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை, தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருக்கையில் அராஜகமான முறையில் அவரை கைது செய்திருக்கிறது, இந்த தவெக அரசு; இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் ஒருபோதும் தி.மு.க அடிபணியாது” எனத் தெரிவித்துள்ளார்.