திமுக இளைஞர் அணி தென்மண்டல் சந்திப்பு Pt web
தமிழ்நாடு

திமுக இளைஞர் அணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு.. 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏற்பாடு!

விருதுநகர் கல்குறிச்சியில் இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகளின் தென்மண்டல சந்திப்பு நடைபெறுகிறது. ஒரு லட்சம் நிர்வாகிகள் வரை பங்கேற்பார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

PT WEB

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சி பகுதியில் திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். இதற்காக, சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் மேடை, வரவேற்பு வளாகம், நடைபாதை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.

மாநாடு நடைபெறும் இடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு திமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், இளைஞர் அணியை களமிறக்கும் நோக்கில் இந்த சந்திப்பு கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே, திருவண்ணாமலையில் இளைஞரணி மாநாடு, பல்லடத்தில் மகளிர் அணி மாநாடு நடத்தப்பட்ட நிலையில், அதனுடைய தொடர்ச்சியாக இந்த தென்மண்டல சந்திப்பு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்புரையாற்றுகிறார். மேலும், இந்த சந்திப்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இளைஞரணி நிர்வாகிகளுக்கு சீருடை மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கூட்டம் நடைபெறும் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 கிலோமீட்டர் தூரம் முழுவதும் திமுக இரு வண்ணக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. தொடர்ந்து, இம்மாநாட்டுப் பகுதியில், இரவு நேரத்தில் விழாக்கோலம் பூண்ட வகையில் லைட் அலங்காரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின், நுழைவாயிலில் இருந்து மேடைக்கு ரேம்ப் வாக் வழியாக நடந்து செல்லும் வகையில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு தண்ணீர், பிஸ்கட், கடலை மிட்டாய், இனிப்பு–காரம் உள்ளிட்டவை அடங்கிய பைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மேடையின் இருபுறமும் தொண்டர்களை கவரும் வகையில் இளைஞர் அணியின் 45 ஆண்டு கால பயணத்தை விளக்கும் புகைப்படத்தொகுப்பு, திராவிடம் மாடல் அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படத்தொகுப்பு வைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள பேனர்

இந்த கூட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக 3,500 போலீசார், 6 தீயணைப்பு வாகனங்கள், 10 ஆம்புலன்ஸ்கள், மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 30 இடங்களில் குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் மற்றும் மொபைல் டாய்லெட் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. திமுக தென்மண்டல பொறுப்பாளராக உள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது சொந்த மாவட்டத்தில் இந்த சந்திப்பை மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளார். மொத்தத்தில், விருதுநகரில் நடைபெறும் திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், அரசியல் உற்சாகம், சிறப்பான ஏற்பாடு மற்றும் பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் முக்கிய அரசியல் நிகழ்வாக அமைந்துள்ளது.