நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த தேவிபிரியா (35) என்பவர் இருந்து வந்தார். இவரது கணவர் அருள்லால் (50) ராசிபுரம் கடை வீதியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நகைக்கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் மோனிகாஸ்ரீ (18) 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் வீடு இன்று காலை வெகு நேரமாக திறக்கப்படாததை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது அருள்லால் மற்றும் அவரது மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தத்தை அறிந்துள்ளனர். இதையடுத்து ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உள்ளே சென்று பார்த்ததில் இவர்களுடன் அவர்களின் மகள் மோனிகாஸ்ரீயும் தற்கொலை செய்ததை அறிந்துள்ளனர்.
இதனை அடுத்து 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அவற்றை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை காரணம் குறித்து ராசிபுரம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளனரா எனவும் விசாரணை செய்து வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.