தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஆளுங்கட்சியான தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சியான திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும், மறைமுகமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் அமைச்சர் நிர்மல்குமார் பேசிய கருத்துக்குகள் தற்போது விவாதப்பொருளாகியிருக்கிறது.
அதேபோல, சமீபகாலமாகவே, உதயநிதிக்கு திமுகவை வழிநடத்த தகுதியில்லை; எம்.பி. கனிமொழி மற்றும் உதயநிதி இடையே கட்சியை யார் நடத்த வேண்டும் என்பதற்கு திமுக நிர்வாகிகளிடையே வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறிவரும் கருத்துக்கள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தச்சூழலில் தான், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “திமுக ஒரு தீய சக்தி. அந்தக் கட்சியை ஒழிப்பதற்காகவே தமிழக வெற்றிக் கழகத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கினார். மக்கள் ஆதரவுடன் திமுகவை முதலமைச்சர் விஜய் ஒழித்துக் கட்டிவிட்டார்” என்றார். மேலும், “இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவினர் அரசியலை விட்டு விலகி, அண்ணா அறிவாலயத்தை வெள்ளையடித்து, அங்குள்ள அறைகளை வாடகைக்கு விட வேண்டிய நிலை உருவாகும்” என விமர்சித்திருக்கிறார்.
இவ்வாறு, அமைச்சர் நிர்மல்குமார் திராவிட முன்னேற்ற கழகத்தை கடுமையாக விமர்சித்து வருவது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.