கே.பழனிசாமி எக்ஸ் தளம்
தமிழ்நாடு

”7.5 சதவீதத்திற்கு திமுகதான் காரணம்” - அமைச்சர் கருத்துக்கு இ.பி.எஸ். கண்டனம்!

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு திமுகதான் காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியிருக்கும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Premkumar S

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 7.5% இடஒதுக்கீடு திமுகவின் போராட்டம் காரணமாகவே அமல்படுத்தப்பட்டது என கூறியதைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும், இக்கூட்டத் தொடர் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை நடக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருக்கிறார். இந்தச் சூழலில்தான் சட்டப்பேரவையில் இன்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோது, ’அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மருத்துவத்துறையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மசோதாகவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். திமுகவின் போராட்டம் காரணமாகவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது’ எனப் தெரிவித்தது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

மா.சுப்பிரமணியன்

இதையடுத்து, மா.சுப்பிரமணியன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில், அதிமுக எம்.எல்.ஏக்கள்-அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இதற்கு விளக்கமளித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்வதாகவும் 7.5 சதவிகிதம் தொடர்பாக திமுகவினர் பேசிய ஏதாவது ஓர் ஆதாரத்தை காட்ட முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார். அதோடு, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையிலும், அரசியலமைப்பு விதியை பயன்படுத்தி அரசாணை பிறப்பித்து 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது அதிமுகதான் எனவும் பதிலளித்திருக்கிறார்.

தொடர்ந்து, நீட் விவாகரம் குறித்துப் பேசிய அவர், ”நீட்டை திமுகவால் ரத்து செய்ய முடிந்ததா? எனவும் நீட் விவகாரத்தில் திமுக சாதித்தது என்ன” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கே.பழனிசாமி

பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 11.19 சதவீத தமிழக வளர்ச்சி குறித்துப் பேசுகையில், திமுக ஆட்சியில் மட்டுமே உற்பத்தி அதிகம் எனக் கூறுவது தவறு. அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சினாலும்தான் தமிழ்நாடு 11.19 சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறது. தொடர்ந்து, விளம்பரம் தேடும் செயலில் மட்டுமே தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. நாங்கள் செய்ததை வைத்துகூட விளம்பரம் தேடிக்கொண்டது இல்லை எனவும் தெரிவித்து இருக்கிறார்.