தமிழ்நாடு

விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்

webteam

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கண்டறிவதற்கான நேர்காணல் இன்று தொடங்குகிறது.

தமிழகம் - புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விரும்பி விண்ணப்பம் அளித்தவர்களுடன் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல் நடத்துகிறார். திமுகவின் தலைமையகமான சென்னை - அண்ணா அறிவாலயத்தில், வரும் ஆறாம் தேதி வரை நேர்காணல் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று காலை 8 மணிக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் நேர்காணல் நடத்துகின்றனர்.

மாலை 4 மணிக்கு விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் நேர்காணல் நடைபெறுகிறது. விருப்ப மனு அளித்தவர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக் கூடாது என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.