திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் Pt web
தமிழ்நாடு

அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் விவகாரம்.. திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்.. அனுமதி மறுப்பு!

அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டி வீடியோ வெளியான விவகாரம்; அமைச்சரவையிலிருந்து அவரை நீக்க கோரி திமுக மாணவரணி இன்று ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது.

Premkumar S

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமான (ஜூன் 26) சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவியது. அதில், தவெக அமைச்சரவையில் இருக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான சரத்குமார், ஐபிஎல் போட்டிகளின் போது சேப்பாக்கம் கிரிக்கெட் போதைப்பொருள் வைத்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோவைத் தொடர்ந்து, அமைச்சர் சரத்குமாரை எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் விமர்சித்து வந்த நிலையில் அன்றைய தினமே, அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டார் அமைச்சர் சரத்குமார்.

அமைச்சர் சரத்குமார்

அதில், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடக்கும் போது தனது கைக்குழந்தை மற்றும் குடும்பத்தோடு சென்றதாகவும் அப்போது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மாத்திரையை உடைத்து பொடியாக்கி கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும், பல்லாயிரம் பேர் தனக்கு முன்னும் பின்னும் இருக்க, காவலர்கள் பாதுகாப்பு இருக்க எப்படி ஒரு நபரால் போதைப்பொருளை பயன்படுத்த இயலும்? தன் மீது திட்டமிட்டு இப்படி ஒரு வதந்தியை சுமத்தி வருகிறார்கள்” எனவும் வீடியோவில் பேசியிருந்தார். எனினும், கைக்குழந்தைக்கு கொடுக்க வேண்டிய மாத்திரையை மொபைல் போனில் வைத்து ஏன் கொடுக்க வேண்டும், உடல்நிலை சரியில்லாத குழந்தையே ஏன் கிரிக்கெட் பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்தசூழலில் தான், அமைச்சர் சரத்குமாரை பதவி விலகக்கோரி, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை இன்று அறிவித்திருந்தது திமுக மாணவரணி. அந்தவகையில் தான், இன்று காலை 9.30 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் மைத்தானத்தில் போராட்டம் நடைபெறவிருந்தது. எனினும், போராட்டம் நடத்த அனுமதி கோரி 5 வேலை நாட்களுக்கு முன்பு கடிதம் அளித்திருக்க வேண்டும் எனக் கோரி சென்னை பெருநகர காவல்துறையினர் அனுமதி மறுத்திருக்கின்றனர்.

தொடர்ந்து, அனுமதியின்றி மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திமுகவினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக மாணவரணி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.