தமிழ்நாடு

ஊழலில் திளைத்த திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது: பென்னையன் பேச்சு

kaleelrahman

ஊழலில் சாதனை படைத்த கட்சி திமுக.  இனி அந்தக் கட்சியால் ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது என முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம் செண்ணீர்குப்பம் ஊராட்சியில் மாவட்ட அண்ணா தொழிற் பேரவை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மேதினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பேசும்போது.

"ஆட்சிக்கு வந்த ஒருவருட காலத்திலேயே மக்கள் மத்தியில் அவப்பெயரை சம்பாதித்துள்ள அரசு திமுக அரசு. மக்களை பற்றி சிந்திக்காமல் ஆட்சிக்கு வந்த உடனே அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கும் அராஜகத்தில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

தேர் எரியுது, மருத்துவமனை எரியுது. குப்பைமேடு எரியுது. ஆனால், மக்கள் வாழுகின்ற வீடுகளில் விளக்கு மாத்திரம் எரியவில்லை" என விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன், "தமிழகத்தில் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். கருணாநிதி முதல்வரானதற்கு காரணமே எம்ஜிஆர் தான். தொடர்ந்து ஊழலில் திளைத்து வரும் திமுகவை இனி மக்கள் ஒருபோதும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க மாட்டார்கள்" என பேசினார்.