தமிழ்நாடு

“அண்ணா பல்கலை., சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வேண்டும்”-திமுக போராட்டம்

webteam

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் அதிமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனை கண்டித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எதிரே திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது இடஒதுக்கீட்டிற்கும், மாநில நிதி உரிமைக்கும் எதிராக செயல்படும் சூரப்பாவை பணி நீக்கம் செய்ய வேண்டும், அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் இறுதிவரை தொடர வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகள் முன்பும் திமுகவினர் திரண்டு போராட்டம் நடத்தினர். சென்னையில் போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிம் பேசிய உதயநிதி ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் விவகாரத்தில் அதிமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டினார்.