'மே 2-ம் தேதி தேர்தல் முடிவு சிறப்பாக இருக்கும்; அமைதியாகவும் ஆர்வத்துடனும் மக்கள் வாக்களித்து வருகின்றனர்' என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருகை தந்தார். பின்னர் வரிசையில் நின்று மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஓட்டுபோட்டது போட்டாச்சு. மே 2-ம் தேதி தேர்தல் முடிவு சிறப்பாக இருக்கும்; அமைதியாகவும் ஆர்வத்துடனும் மக்கள் வாக்களித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்தியும் அல்ல அதிருப்தியும் அல்ல.
தோல்வி பயம் காரணமாக தேர்தலை நிறுத்த அதிமுகவினர் முயன்றனர். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது” என்று கூறினார்.
மு.க.ஸ்டாலின் வாக்குப்பதிவு செய்வதற்கு முன் தலைவர்களின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.