தமிழ்நாடு ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதையடுத்து சட்டமன்றத்தில் ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டு வருவதாகக் கூறி அரசியல் கட்சிகளும் ஆளுநருக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சென்னைக்கு வருகிறார். இந்நிலையில் சென்னை அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் அறிஞர் அண்ணா, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.
அண்ணா படத்துக்கு கீழே எல்லை காக்கும் அய்யனார் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. 'ஆட்டுக்கு தாடியும் தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவியும் எதற்கு? என்ற வாசகத்திற்கு கீழே பெரிய எழுத்தில் Dictator Ravi Get Out Ravi என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
நேற்று நள்ளிரவில் பல்வேறு இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில், ஒருசில இடங்களில் கிழித்து அகற்றப்பட்டுள்ளன. இருப்பினும் பல இடங்களில் தற்போதும் காணப்படுகிறது.
திமுகவைச் சேர்ந்த ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.