தமிழ்நாடு

ஊழலுக்கு பெயர் பெற்ற கட்சி திமுக- அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்

kaleelrahman

மதுரையில் அதிமுகவின் 49-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளித்தார். 


அதிமுகவின் 49-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரை தவிட்டு சந்தை பகுதியில் அதிமுக கொடியை ஏற்றி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜு, ஏழை எளியோருக்கு உணவுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த மாவட்ட மற்றும் வார்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது, நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் ஆணித்தரமாக அதிமுக அரசு இருக்கிறது. இதுவே திமுக அரசாக இருந்தால் நழுவி கொண்டு சென்றிருக்கும். மத்திய அரசுக்கு இணையான மாநில அரசின் பாடத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்ச்சி விகிதம் பன்மடங்கு கூட இருக்கிறது.

வரும் ஆண்டுகளில் எங்களுக்கு போட்டி திமுக மட்டுமே. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு எதிரிகள் இல்லை என்றவரிடம், திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி எனக் கூறியது குறித்த கேள்விக்கு, திமுக ஆட்சியில் தான் தமிழகம் மின்வெட்டால் இருண்டு கிடந்ததாகவும் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உள்ளதாகவும் தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கே அதிமுக அரசு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி இருப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு சுட்டிக்காட்டியுள்ளார். 


நாங்கள் சொந்தக் காலில் நிற்க விரும்புகிறோம். அடுத்தவர்கள் காலை நம்பி நிற்கவில்லை. திமுக கொள்ளையடிப்பதை கலையாக கொண்டுள்ளது. ஊழலுக்கு பெயர் பெற்ற கட்சி திமுக. பாரத பிரதமரின் நல்ல செயல்பாடுகளுடன், எங்களோட கூட்டணி கட்சி செயல்படுகிறது; அவர்களின் செயல்பாடு எங்களுக்கு பிடித்துள்ளது அதன் காரணமாக அவருடன் தோழமை கொண்டிருக்கிறோம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மகன் மட்டும் தற்போது சிக்கியுள்ளார். இன்னும் பலர் சிக்க வேண்டியுள்ளது. திமுகவினர் இந்தியை எதிர்ப்பது போன்ற நாடகமாடுகிறார்கள். அவர்கள் வைத்துள்ள பள்ளியில் இந்தி பாடம் நடத்துகிறார்கள். 2 ஜி அலைக்கற்றை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. பலர் சிக்க இருக்கிறார்கள். எங்களுக்கு என சுய செல்வாக்கு இருக்கிறது. தோழமைக் கட்சி செல்வாக்கையும் பயன்படுத்திக் கொள்கிறோம்" என்றார்.