மு.க. ஸ்டாலின் கோப்பு படம்
தமிழ்நாடு

பிரம்மாண்ட மாநாடு.. தயாராகும் திருச்சி.. சென்டிமென்ட் பார்க்கும் திமுக?

திருச்சியில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PT WEB

2021இல் திருச்சி சிறுகனூரில் மாநாடு நடத்தி ஆட்சியைப் பிடித்ததால், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், 'சென்டிமென்ட்' அடிப்படையில் மீண்டும் இதே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

திமுகவின் 12ஆவது மாநில மாநாடு திருச்சி சிறுகனூரில் மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுகவின் பிரம்மாண்ட மாநில மாநாட்டிற்கான பணிகள் முழுவீச்சில் விரைவாக நடைபெற்று வருகிறது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டுப் பணிகள்

தமிழ்நாடு முழுவதும் மாநாட்டிற்கு வந்து செல்வோா் பாதுகாப்பாக திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரமாண்ட மேடையுடன் ராம்ப் அமைக்கப்பட்டு வரும் இந்த மாநாட்டுத் திடலில், லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு உணவுக்கூடங்கள், குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. மேலும் மாநாடு மேடை மற்றும் பாா்வையாளா்கள் அமரும் பகுதிகள் 400 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்த 200 ஏக்கா் இடம் தயாா் படுத்தப்பட்டுள்ளது.

மாநாட்டிற்க்கு வருபவர்களுக்கு 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா்த் தொட்டிகள் ஆங்காங்கே அமைக்கப்படவுள்ளன. 12வது மாநில மாநாட்டிற்கு 10 லட்சம் போ் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 5 ஆயிரம் பாா்வையாளா்கள் வரையில் தனித்தனியே பிரித்து பாக்ஸ் போன்ற அமைப்பில் அமரவைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. மாநாட்டின் தொடக்கமாக திமுக கொடி ஏற்றுவதற்காக 100 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம், பொதுக்கூட்ட நிகழ்வுகளை ஒளிபரப்ப 300 அடி தொலைவுக்கு பிரமாண்ட எல்இடி திரைகள் அமைக்கப்படவுள்ளது.

திமுக மாநாடு

மாநாடு அடுத்த வாரம் திங்கட்கிழமை நடைபெறும் சூழ்நிலையில், ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் மிக விரைவாக மாநாட்டிற்கு முகப்பு வாயில் ராம்பு அமைப்பதற்கு ஜேசிபி இயந்திரங்கள் இடைவிடாது பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது இதே இடத்தில் திமுக மாநாடு நடத்தி தேர்தல் வாக்குறுதி முக்கிய பிரகடனங்களை அறிவித்து வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அதே இடத்தில் மீண்டும் 2026 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைப்பதற்கு சென்டிமென்டாக இந்த மாநாட்டை அதை இடத்தில் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.