சிவகங்கை மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் ஆயுப் கான், தூய்மைப் பணியாளர்களிடம் இருந்து விசிலை வாங்கி குப்பையில் வீசி, இனி வார்டில் விசில் சத்தம் கேட்கக் கூடாது என வலியுறுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் ஒருவர், தூய்மைப் பணியாளர்களிடம் இருந்த விசிலை வாங்கி குப்பையில் வீசிவிட்டு இனி இந்த வார்டில் விசில் சத்தம் கேட்கக் கூடாது என வலியுறுத்திய சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டில் இன்று காலை வழக்கம் போல குப்பை சேகரிக்கும் வண்டி வந்துள்ளது. அப்போது, அந்த வண்டியை நிறுத்திய அந்த பகுதி திமுக கவுன்சிலர் ஆயுப் கான், இனிமேல் தனது பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது எனவும் விசில் சத்தம் இந்த வார்டில் கேட்கக் கூடாது எனவும் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, சொந்த செலவில் உங்கள் வண்டியில் ஒலிப்பெருக்கியைப் பொறுத்துகிறேன். இனி நீங்கள் அதைப் பயன்படுத்தி குப்பை சேகரித்துக்கொள்ளலாம் எனவும் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விசில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது, அரசியல் நடவடிக்கையா அல்லது மைதான நிர்வாக எடுத்த நடவடிக்கையா என பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில், தற்போது தூய்மைப் பணியாளர் தங்கள் வார்டில் விசில் பயன்படுத்தக் கூடாது; விசில் சத்தமே கேட்கக் கூடாது என திமுக கவுன்சிலர் ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.