தமிழ்நாடு

மு.க.அழகிரி 'விளைவு' போகப் போக தெரியும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

kaleelrahman

"திமுக உடைந்துவிட்டது என மதுரையில் மு.க.அழகிரி தலைமையில் கூடிய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதன் விளைவு போகப் போக தெரியும்" என்றார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். 

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொங்கல் தொகுப்புகளை வழங்க தமிழக அரசு அறிவித்து, அதை கொடுக்கும் பணிகள் இன்று முதல் நடந்து வருகிறது. இதையடுத்து, திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”பொங்கல் பரிசு தொகுப்பு தரும் விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக உடைந்துவிட்டது என மதுரையில் மு.க.அழகிரி தலைமையில் கூடிய கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.


இதன் விளைவு போகப் போகத் தெரியும். அதிமுக அரசை குறை சொல்லி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு இருக்கின்ற வாக்குகளும் போய்விடும். மு.க.அழகிரியின் நிலைப்பாடு என்ன என்பது போகப் போகத் தெரியும். அணுமின் நிலைய தேர்வு மையத்தை மும்பையில் வைத்தது குறித்து வெங்கடேசன் எம்.பி. பிரதமருக்கு கடிதம் எழுதி அவர் அழுத்தம் கொடுத்ததுபோல் நாங்களும் தேர்வு மையம் தமிழகத்தில் அமைய முயற்சி எடுப்போம்” என்றார்.