கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பினை ஆயுஷ் அமைச்சகம் நடத்தியுள்ளது.
பயிற்சி வகுப்பின் கடைசி நாளான 20 ஆம் தேதியன்று ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேச்சா இந்தியில் பேசியதாக கூறப்படுகிறது. அதற்கு அவரை ஆங்கிலத்தில் பேசுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்.
ஆனால் அதற்கு அவர் தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்றும், இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து வெளியேறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது கடும் சர்ச்சையாகியுள்ள சூழலில் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேச்சாவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்.
“இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என கூறிய செயலாளர், ஆங்கிலம் தெரியாமல் யோகா பயிற்சி நடத்த வந்தது ஏன்? மத்திய அரசு அவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க தமிழக முதலமைச்சர் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’” என அறிக்கையில் தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.