தமிழ்நாடு

மருத்துவர்களின் ஆலோசனைப்படி விஜயகாந்த்-ன் 3 கால்விரல்கள் அகற்றம்

Sinekadhara

விரல்கள் அகற்றப்பட்ட நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்துவந்தார். அவருக்கு, வலது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்ற மருத்துவ காரணத்தினால், அங்கு தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால், மருத்துவரின் பரிந்துரைபடி, வலது கால் கட்டை விரல் உள்பட அடுத்தடுத்து மூன்று விரல்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்டது. தற்போது அவர் தொடர் மருத்துவ சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த நிலையில் தேமுதிக சார்பாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்னையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.