தமிழ்நாடு

குற்றச்சாட்டுகளை முன்வைத்த கிராம மக்கள் - கோபமடைந்து கோப்புகளை வீசி எறிந்த கோட்டாட்சியர்

webteam

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கல்குவாரியை மூடுவது தொடர்பாக கிராம பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், கோபமடைந்த வருவாய் கோட்டாட்சியர் கோப்புகளை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கருவேலம்பட்டியில் அமைந்துள்ள கல்குவாரியால் விவசாயம் பாதிக்கப்படுவதாகக் கூறி, கிராம மக்கள் புகார் அளித்த‌னர். இது தொடர்பான பேச்சுவார்த்தை‌ திருமங்கலம் கோட்டாட்சியர் சவுந்தர்யா தலைமையில் நடைபெற்றது. அப்போது கிராம பிரதிநிதி ஒருவர், கோட்டாட்சியர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகக் கூறி, குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அப்போது குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை கோட்டாட்சியர் கேட்டபோது அந்த நபர் அமைதி காத்தார். இதனால் கோபமடைந்த கோட்டாட்சியர், வாதிட்டவரை நோக்கி கோப்புகளை வீசி எறிந்து சென்றார். இதனையடுத்து கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டிருந்த கிராம மக்கள், கல்குவாரி மூடும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி கலைந்து சென்றனர்.