தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மிளகாய் பொடியை தூவி மூதாட்டியிடம் நகை பறிப்பு!

webteam

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த மர்ம நபர் மூதாட்டியிடம் ஆறரை சவரன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள டிவிஎஸ் காலனி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி பொன் ராணி. வீட்டில் தனிமையில் வசித்து வரும் இவரிடம் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்த மர்மநபர் ஒருவர் சாக்லெட் கொடுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மீண்டும் தனது சட்டை பாக்கெட்டில் கைவிட்ட அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் மிளகாய் பொடியை எடுத்து மூதாட்டியின் கண்களில் தூவி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார்.

இதில் நிலை தடுமாறி மயங்கி விழுந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாக்லெட் கொடுப்பது போல் மிளகாய் பொடியை தூவி தன்னிடம் நகையை பறித்துச் சென்றது ஒரு பெண் போல் இருந்தது என நகையை இழந்த மூதாட்டி பொன் ராணி கூறியுள்ளார். கிறிஸ்துமஸ் நெருங்கி வரும் வேளையில் ஆங்காங்கே கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.