தமிழ்நாடு

”மாணவி மாடியில் இருந்து குதித்தாரா அல்லது தள்ளி விடப்பட்டாரா?”- நெல்லை வழக்கறிஞர் சந்தேகம்

webteam

கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடு உள்ளது சிபிஐ விசாரணை நடத்தினால் தான் மாணவிக்கு நியாயம் கிடைக்கும் என நெல்லை வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சேனைத் தலைவரும் வழக்கறிஞருமான மகாராஜன் நெல்லையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்ததார். அப்போது... கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இடம் பெறவில்லை.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி மாணவி 12ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கே இறந்திருக்க வேண்டும் அவர் சாப்பிட்ட உணவு அரை குறையாக செரிமானம் ஆகியிருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர் அதன்படி பார்த்தால் 12ஆம் தேதி இரவே மாணவி இருந்திருக்க வேண்டும். எனவே அவர் மாடியில் இருந்து குதித்தாரா அல்லது தள்ளி விடப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிபிசிஐடி விசாரணை நடத்தினால் இதில் நியாயம் கிடைக்காது சிபிசிஐடி என்ற அமைப்பே தேவையில்லாத ஒன்று.

உதாரணமாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த மருதூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், மாணிக்க ராஜா ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு சிவத்திப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இருவர் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாகக் கூறி குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால் 2018 ஆம் ஆண்டே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து இரண்டு பேரும் காவல் துறையால் அடித்துக் கொலை செய்யப்பட்டது உண்மை என்றும் பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் 2020 ஆம் ஆண்டு சிபிசிஐடி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

ஆனால், நான்கு வருடங்களாகியும் இதுவரை இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸ் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை அதேசமயம் இதில், ஏழு பேர் குற்றவாளிகள் என தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த ஏழு பேரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இருவரின் மரணத்திலும் அப்போது நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அதிகாரி உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறது. எனவே அவர்களை காப்பாற்றும் நோக்கில் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் தாமதம் ஏற்படுத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்திலும் சிபிசிஐடி விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது. எனவே மாணவி மரணம் மற்றும் நெல்லை சிவந்திப்பட்டி லாக்அப் டெத் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் தான் நியாயம் கிடைக்கும் மாணவி மரணம் தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் சமூக விரோதிகள் ரவுடிகள் நுழைந்திருப்பதாகக் கூறுவது காலம் காலமாக சொல்லும் கட்டுக்கதை. பொதுவாக போராட்டம் முற்றும்போது வன்முறை வெடிக்கும். எனவே அரசு இந்த விஷயத்தை முறையாக கையாண்டிருந்தால் குற்றங்கள் கட்டுப்பட்டு இருக்கும் என்று கூறினார்.