“நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பிரபாகரனுடன் இருந்த புகைப்படத்தை எடிட் செய்தது நான்தான்” என தனது முகநூல் பக்கத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதியன்று தெரிவித்திருந்தார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். இந்த சம்பவம் பரபரப்பானதை அடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தார் சங்ககிரி ராஜ்குமார். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் இதற்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சீமான் இதற்கு நேரடியாக பதில் எதுவும் தெரிவிக்காமல் தவிர்த்தார். சங்ககிரி ராஜ்குமார் ஒரு பெரியாரிஸ்ட் என்பதால் இதுபோன்று பொய்யான குற்றச்சாட்டை தெரிவிக்கிறார் என்று நாம் தமிழர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மீண்டும் தான் சொன்னதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார் ராஜ்குமார். அதில் அந்தப் போட்டோவை எடிட் செய்தது தான் தான் என்று அழுத்தமாக தெரிவித்தார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், சங்ககிரி ராஜ்குமார் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், தொலைபேசி வாயிலாக தங்களுக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்ப்பதாகவும், உலகே கண்டு வியந்த ஒப்பற்ற தலைவர் ஆன பிரபாகரனை முடிந்த வரை இழிவுபடுத்தி விட்டீர்கள் இனியாவது விட்டு விடுங்கள் என பதிவிட்டுள்ளார்.
“ அண்ணனின் தம்பிகளுக்கு வணக்கம். கடந்த நான்கு, ஐந்து நாட்களாக என் அலைபேசிக்கு நேரடியாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
அழைப்பை எடுத்தால் வீட்டில் இருக்கும் பெண்களை வசை பாடுகிறீர்கள் அல்லது மிரட்டுகிறீர்கள். அதற்காக அச்சப்பட்டு கொண்டு இந்த பதிவை எழுதவில்லை. கசப்பை சுவைத்த உங்கள் நாவிற்கு இந்த ஆபாச வார்த்தைகள் தான் ஆறுதல் தரும் என்றால் பேசிவிட்டு போங்கள். இடையிடையே 'டேய்..சங்ககிரி ராஜ்குமார் நீ எந்த ஊர் காரன்டா' என்று கேட்டு சிரிப்பும் மூட்டுகிறீர்கள்.
உங்கள் அச்சுறுத்தலுக்கோ.. ஆபாச வசவுகளுக்கோ நான் கவலைப்படவில்லை. உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். எனக்கு அழைப்பதற்கு முன்பாக உங்கள் முகப்பு படமாக வைத்திருக்கும் தலைவர் பிரபாகரன் படத்தை நீக்கிவிட்டாவது அழையுங்கள். வீரம் நிறைந்த அவர் புகைப்படத்தை கண்களில் பார்த்துக் கொண்டே, காதுகளில் உங்கள் அழுக்கு வார்த்தைகளை கேட்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. உலகே கண்டு வியந்த ஒரு ஒப்பற்ற தலைவரை முடிந்த வரை இழிவு செய்து விட்டீர்கள் இனியேனும் விட்டு விடுங்கள். " என்று பதிவிட்டுள்ளார்.