p ranjith
p ranjith pt web
தமிழ்நாடு

“அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்!”- இயக்குநர் பா.ரஞ்சித்

PT WEB

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரொருவரை, அவருடன் படித்த சக பள்ளி மாணவர்களே சாதிய பாகுபாட்டால் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தாக்குதலில் பாதிக்கப்பட்ட அண்ணனை காப்பாற்றச் சென்ற தங்கைக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் அவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இச்சம்பவத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போன்றோரும் இசையமைப்பாளர் நடிகர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோரும் இச்சம்பவத்திற்கு கண்டனங்களையும் ஆதங்கத்தையும் தெரிவித்திருந்தனர்.

நாங்குநேரி

இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே நாங்குநேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து, அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்!” என தெரிவித்துள்ளார்.