இயக்குநர் கோபி நயினார் திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் வசித்து வருகிறார். அறம் படத்திற்கு பிறகு நன்கு அறியப்பட்ட இவர் வெற்றிமாறன் தயாரிப்பில் மனுசி படத்தினை இயக்கி முடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக கோபி நில உரிமை சார்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக சுற்றுச்சூழல் போராட்டங்களும், அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு எதிரான போராட்டங்களில் மக்களோடு களத்தில் நின்று போராட்டி வருகிறார். சமீபத்தில் கூட பழவேற்காடு பகுதியில் குவாரிக்காக நிலத்தை தோண்டும் நிகழ்வை எதிர்த்து மக்களுடன் சேர்ந்து தீவிரமாக போராட்டம் செய்தார்.
இத்தகைய சூழலில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் திமுக அரசு மீதும் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் சிந்தனையாளர்கள் மீதும் விமர்சனங்களை முன் வைத்து இருந்தார். அதாவது, மக்களுக்காக போராடும் செயற்பாட்டாளர்கள் மீது அரசு வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்கிறது என்றும் திராவிட அரசுக்கு ஆதரவாக செயல்படும் மதிவதனி போன்றவர்கள் திராவிட மக்களுக்கு பிரச்னை என்று முன் வருவதில்லை என்று விமர்சித்து இருந்தார்.
திக துணைப்பொதுச் செயலாளர் மதிவதனி மீதான விமர்சனத்திற்கு பிறகு அவருக்கு ஆதரவாகவும், கோபி நயினாருக்கு எதிராகவும் இணையத்தில் திமுக ஆதரவாளர்கள் காட்டமான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். கோபி நயினார் பேசியதாக சில ஆடியோக்களும் இணையத்தில் கசியவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அறம் திரைப்படத்தின் இயக்குநர் கோபி நாராயணன் இதுகுறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், " தலித் மக்களுக்கு குடிமனை கேட்டும் அவர்களின் வாழ்நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரியும் போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும் கேவலமாக பொதுவெளியில் இழிவுபடுத்தப்படுகிறேன்.
தன்னை ஜனநாயக அமைப்பு என்று கூறிக்கொள்கின்ற ஒரு அமைப்பை எதிர்த்து ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பினால் சர்வாதிகார மனநிலையோடு அது என்னை எதிர்கொள்கிறது இத்தகைய சூழலில் இந்த சர்வாதிகார மனநிலை கொண்டவர்களின் மத்தியில் வாழ்வதற்கே எனக்கு அச்சமூட்டுகிறது
தமிழகம் முழுவதும் தலித் மக்களின் நிலை இது தான் என்று நம்புகிறேன் தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு திராவிட சிந்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை
இந்த சூழலில் இன்று கடுமையாக அவமதிக்கப்படுகிற நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம் இந்திய முழுக்க நடக்கின்ற அறிவுஜீவிகளின் சமூக செயற்பாடட்டாளர்கள் கலைஞர்கள் மீது நடந்த படுகொலைக்கும் எதிர்காலத்தில் எனக்கு நிகழ போகும் படுகொலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன். அத்திரைப்படத்தின் கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே. அதற்காதான் திராவிடர் கழகம் என்னை பாராட்டி தந்தை பெரியார் விருது வழங்கியது
நிகழ்காலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டங்களை முன்னெடுக்கும் போது இந்த செயல் என்னை அவமானப்படுத்துகிறது
அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்திரிக்கிறது. இது போன்ற காரணுங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்.
என்றும் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் போராட்ட உணர்வோடு கோபி நயினார்.” என்று தெரிவித்துள்ளார்.