தமிழ்நாடு

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த தமிழக அரசுக்கு பாரதிராஜா நன்றி

Rasus

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டதாக, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் தமிழக அரசுக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலால் பொதுமக்கள் வீடுகள், உடமைகளை இழந்து தவிப்பது மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். புயலுக்கு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள பாரதிராஜா, தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெருமளவு உயிர்தேசம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொலைத்தொடர்பு, மின்சாரம், சாலை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் அரசு அதிகாரிகளுக்கு சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக பாரதிராஜா தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கு உதவும் வகையில் மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைந்து உதவ வேண்டும் என பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

கஜா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.