தமிழ்நாடு

முதலில் மிளகாய் பொடி தூவல் ! பின்பு விரட்டி வெட்டிப் படுகொலை - திண்டுக்கல்லில் பயங்கரம்

முதலில் மிளகாய் பொடி தூவல் ! பின்பு விரட்டி வெட்டிப் படுகொலை - திண்டுக்கல்லில் பயங்கரம்

webteam

திண்டுக்கல்லில் காவல்நிலையம் அருகே பட்டப்பகலில்  மிளகாய் பொடி தூவி இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் ஆட்டு இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். குமரேசன் மீது  கொலை,கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக குமரேசன் சிறை சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் தெற்கு காவல்நிலையம் அருகே உள்ள ஆர்.வி.நகர் 3வது தெருவில் நடத்து வந்துகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் இவரை வழிமறித்தது. குமரேசனின் முகத்தில் மிளகாய் பொடி தூவிய அந்தக்கும்பல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளது. எதிர்பாராத தாக்குதலால் நிலைக்குலைந்த குமரேசன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். அவரை தொடர்ந்து தாக்கிய அந்தக்கும்பல் தலையில் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே குமரேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குமரேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தச் கொலை சம்பவம் நடத்திருக்கலாம் என்ற காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

குமரேசன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மணிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்கு லக்சையா என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. பட்டபகலில் காவல்நிலையத்திலிருந்து 100மீட்டர் தூரத்தில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.