Accident
Accident PT Desk
தமிழ்நாடு

பால் லாரியும் காரும் மோதிய விபத்தில் திண்டிவனம் தாசில்தார் பலி.. வந்தவாசி அருகே நேர்ந்த பரிதாபம்!

PT WEB

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நெடுங்கல் கிராமம் அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த திண்டிவனம் தாசில்தார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தாசில்தார் சிவசுப்பிரமணியம் அவரது மனைவி பூங்கோதை மற்றும் மகன் சிவசங்கரன் ஆகிய 3 பேர்கள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தவாசி வழியாக திண்டிவனம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மேல்மருவத்தூரில் இருந்து பால் ஏற்றிச்சென்ற லாரி வந்தவாசி அடுத்த நெடுங்கல் கிராமம் அருகே வந்த போது லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த தாசில்தார் சிவசுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தாசில்தாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தகவல் அறிந்த திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவிதேஜா சம்பவ இடத்திற்கு சென்று தாசில்தாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.