ஆனந்தகுமார் & நாகராஜ்
ஆனந்தகுமார் & நாகராஜ் pt
தமிழ்நாடு

தூங்கச் சென்ற இலங்கை தமிழர் காலையில் சடலமாக மீட்பு.. விசாரணையில் திடுக்கிடும் தகவலை சொன்ன நண்பன்..!

PT WEB

செய்தியாளர் - ரமேஷ்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்து வந்தவர் ஆனந்தகுமார்(40). இவர், பெயிண்டராக வேலை பார்த்து வந்த நிலையில், திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ்(30) என்பவருடன் வேலைக்கு வந்த இடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வேலை முடிந்து இருவரும் முகாமில் உள்ள ஆனந்தகுமார் வீட்டில் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு தூங்கச் சென்ற ஆனந்தகுமார் காலையில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அருகில் இருந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ஆனந்தகுமார் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த வத்தலகுண்டு போலீசார் ஆனந்தகுமார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று இரவு ஆனந்த குமாரும் அவரது நண்பர் நாகராஜும் மது அருந்தியபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் பெரிய அளவிலான சண்டையாக மாறியுள்ளது.

இதனால், குடிபோதையில் இருந்த நாகராஜ் அருகில் இருந்த துண்டை எடுத்து ஆனந்தகுமாரை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, தப்பி ஓடியது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார் திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த நாகராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர். மது போதையில் இலங்கை தமிழர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது