காதல் திருமணம் செய்ததால் ஜாதி வேறுபாடு காட்டி தன்னையும் தன் கணவரையும் கொலை செய்ய முயற்சி செய்வதாக தன் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் ஒருவர் கணவருடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மகள் சுருதியும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை காந்தி நகரைச் சேர்ந்த சோலைமலை என்பவரின் மகன் விஜயன் என்பவரும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சுருதியின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயன் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததோடு சுருதியையும் அழைத்துச் சென்று விட்டதாக தெரிகிறது.
கடந்த ஒரு வருடமாக வீட்டில் சுருதியை அவரது பெற்றோர் அடைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 8 நாட்களுக்கு முன்பு கரூரிலிருந்து தப்பி வந்த சுருதி தனது காதல் கணவரிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்நிலையில், சுருதி இன்று தனது காதல் கணவர் விஜயனுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “தன்னை தனது காதல் கணவருடன் வாழ விடாமல் தனது பெற்றோரும் உறவினர்களும் தொடர்ந்து மிரட்டி வருவதால் தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே தனது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” தெரிவிக்கப்பட்டிருந்தது.