தமிழ்நாடு

தகாத உறவை கண்டித்த கணவர் மீது டாடா சுமோ ஏற்றி கொலை? - மனைவி கைது 

webteam

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சிவ பாலாஜி. இவர் நத்தம் யூனியன் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி சண்முகப்பிரியா. இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இவர் மனைவி சண்முகப்பிரியாவிற்கும் அதே பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுனர் பாண்டி என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சிவபாலாஜி இருவரையும் கண்டித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் பாண்டி உள்பட 4 பேர் மற்றும் சிவ பாலாஜியும் சேர்ந்து இரவு மது அருந்தியுள்ளனர்.

அப்போது இவர்களுக்கு இடையே மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிவபாலாஜி கோபித்துக் கொண்டு நத்தம் அருகே சேர்வீடு சாய ஒடையின் அருகே நடந்து வந்தபோது, பாண்டி தனது நண்பர்களான விக்னேஷ், யோகிராஜ், ராஜாராம் ஆகியோர் டாட்டா சுமோ வாகனத்தை வைத்து அவரை மோதியுள்ளனர். இதில் சிவ பாலாஜி நிலைதடுமாறி விழுந்ததாகவும், அப்பொழுது சிவ பாலாஜியின் முகத்தில் கல்லைப் வைத்து கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது சம்பந்தமாக சிவ பாலாஜியின் தாய் பூங்கோதை நத்தம் காவல் நிலையத்தில், தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் செய்துள்ளார். இதையடுத்து நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவ பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

போலீசாரின் விசாரணையில் நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த பாண்டி, யோகராஜ், ராஜாராம் மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் கொலை செய்தாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த நத்தம் போலீசார், அவர்கள் பயன்படுத்திய டாட்டா சுமோ காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், சிவ பாலாஜியின் மனைவி சண்முகப் பிரியாவையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.