செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து, பாஜக மகளிர் அணி சார்பில் கடந்த 3 ம் தேதி போராட்டம் நடந்தது. மதுரையில் தொடங்கிய இந்தப் போராட்டம், சென்னை நோக்கி செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக பழனியில் மகளிர் அணி மாவட்ட தலைவி லீலாவதி தலைமையில் 15 பேர் ஒரு வேனில் புறப்பட்ட போது, முன்னெச்சரிக்கையாக அவர்களை கைது செய்தார் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன். கைதானவர்கள், தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
அப்போது அங்கு வந்த பா.ஜ.க மாவட்ட தலைவர் கனகராஜ் செய்தியாளர் சந்தித்து, “15 மகளிருக்கு 50 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கைதானவர்களை, தீவிரவாதிகள் போல அடைத்து வைத்துள்ளனர். இவர்கள் அடைக்கப்பட்டுள்ள தனியார் மண்டபத்தின் அருகிலேயே தனியார் மதுபான பார் செயல்படுகிறது. அதுவும், 24 மணி நேரமும் அந்த Bar இயங்கி வருகிறது” எனக் கூறி நேரடியாக அதை வீடியோவில் காண்பித்தார். அந்த வீடியோ வைரலான நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனியார் மதுபான கூடத்தில் அத்துமீறி நுழைந்ததாக 5 பிரிவுகளில் பா.ஜ.க மாவட்ட தலைவர் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்யபட்டது. அதில் கனகராஜ் நேற்று மாலை திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் மற்றும் மாவட்ட பொதுசெயலாளர் செந்தில்குமார் ஆகிய இருவரையும் கொடைக்கானல் சாலை சோதனை சாவடியில் வைத்து கைது செய்தனர்.
கனகராஜ் கைது செய்யபட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று இரவு காவல் நிலையத்தில் குவிந்த பாஜக-வினர், காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்தும் வந்தனர். இதில் போலீசாருக்கும் பா.ஜ.கவினருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யபட்டனர்.
இதற்கிடையே நள்ளிரவில் கனகராஜ், செந்தில் குமார் இருவரையும் பழனி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் செய்யபட்டனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதியிடம், “43 நாட்களுக்கு முன் பழனி கோவில் தண்டாயுதபாணி விடுதியில் வழங்கப்படும் வி.ஐ.பி டிக்கெட்டை முறைகேடாக விற்கும் குற்றச்சாட்டில் கனகராஜ் கைது செய்யபட்டார். மேலும் தனியார் மதுபான கூடத்தில் அத்துமீறி நுழைந்ததாகவும் அவர்மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது” என்றனர்.
அப்போது, “கடந்த 43 நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்துக்கு தற்போதுதான் வழக்கு பதிவு செயயப்பட்டுள்ளது. பழிவாங்கும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது” என பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை 3.30 மணி அளவில் கைதான இருவரையும் பழனி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, ஜாமீனில் விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்.