செய்தியாளர்: ரமேஷ்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாக மாசி மாதந்தோறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில், பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை.
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த திருவிழாவில் இந்த ஆண்டிற்கான விழாவையொட்டி (திங்கட்கிழமை) நேற்று இரவு 1 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர். நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு அதன் கறியை சமைத்தனர். 100 மூடை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு மட்டுமே பரிமாறப்பட்டது.
இந்த கறி விருந்தில் ,புண்ணாபட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.