தமிழ்நாடு

திண்டுக்கல்: நண்பனின் பிறந்தநாளை கொண்டாட வந்த ப்ளஸ்2 மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

kaleelrahman

திண்டுக்கல்லில் நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்த பிளஸ் 2 மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள லட்சுமணபுரம் பகுதியை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் சரண். இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் இவருடைய பிறந்த நாளை கொண்டாட இவரது நண்பர் கோபால்பட்டியைச் சேர்ந்த லோகேஸ்வரன் மற்றும் 5 நண்பர்கள் உட்பட 7 பேர் பிறந்த நாள் விழாவை கொண்டாடி உள்ளனர்.

பின்னர் நேற்று மதியம் 12 மணிக்கு திண்டுக்கல் அருகே உள்ள என்எஸ். நகர் பகுதியில் உள்ள விவசாயி சுகுமார் என்பவரின் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது நீச்சல் தெரியாத லோகேஸ்வரன் கிணற்றில் இறங்கி குளித்துள்ளார். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது நண்பர்கள் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இறந்துபோன மாணவனின் உடலை உள்ளூர் இளைஞர்களுடன் சேர்ந்து நேற்று மதியம் 3 மணி முதல் இரவு பகலாக தேடினர். நீண்ட நேரம் தேடியும் உடல் கிடைக்காத நிலையில் கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றி உயிரிழந்த மாணவண் உடலை 19 மணி நேரத்திற்கு பிறகு மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.