தமிழ்நாடு

பாறைகளால் தாமதம்: இதுவரை 40 அடி குழி தோண்டிய ரிக் இயந்திரம்?

webteam

சுர்ஜித்தை மீட்பதற்காக குழி தோண்டும் ரிக் இயந்திரம் இதுவரை 40 அடி குழி தோண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், கடந்த 25ம் தேதி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 61 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை வைத்து குழி தோண்டும் போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் இராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. 

குழி தோண்ட ரிக் இயந்திரம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் இயந்திரங்கள் செயல்பட்டாலும், பாறைகள் குறுக்கீடும், மழை போன்ற காரணங்களால் தோண்டும் பணி காலதாமதமாகி வருகிறது. இதுவரை 40 அடி தோண்டப்பட்டு இருப்பதாகவும் முதல் ரிக் இயந்திரம் 35 அடி தோண்டியதாகவும், இரண்டாவதாக வந்த ரிக் இயந்திரம் இதுவரை 5 அடி தோண்டுயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.