தமிழ்நாடு

பிளிப்கார்ட் மூலம் ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்தது என்ன தெரியுமா?

webteam

ஸ்ரீபெரும்புதூரில் பிளிப்கார்ட் செயலி மூலம் ரூ.80 ஆயிரம் கொடுத்து ட்ரோன் கேமரா வாங்கியவருக்கு பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு கார் அனுப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன் (35). .ஏ.சி மெக்கானிக்கான இவரது நண்பர் சுரேஷி என்பவருக்கு ட்ரோன் கேமரா தேவைப்பட்டதால் ஆன்-லைனில் தேடியுள்ளார். இதையடுத்து பிளிப்கார்ட் செயலி மூலம் 79,064 ரூபாய் மதிப்புள்ள ட்ரோன் கேமராவை கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி கடந்த 20 ஆம் தேதி ஆர்டர் செய்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு இன்று பார்சலில் கேமரா வந்துள்ளது. ஆனால் பார்சல் மிகவும் சிறியதாக இருந்ததால் சந்தேகமடைந்த மொய்தீன், சுரேஷ் ஆகியோர் பார்சலை வீடியோ பதிவுடன் பிரித்துள்ளனர். அப்போது பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு கார் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் டெலிவரி பாயை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளனர். அவர்கள் விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சுரேஷ் கூறுகையில் தொழில் வளர்ச்சிக்காக ட்ரோன் கேமராவை கடன் வாங்கி வாங்கியதாகவும் தற்போது இந்த ஏமாற்றம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.