உயிரிழந்த ராஜா அவருடைய மனைவி கனகா
உயிரிழந்த ராஜா அவருடைய மனைவி கனகா  file image
தமிழ்நாடு

தருமபுரி: மதுபோதையில் தினமும் அடித்து துன்புறுத்திய கணவன்... ஆத்திரத்தில் மனைவி செய்த செயல்!

PT WEB

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜா (40). லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார் இவர். இவருடைய மனைவி கனகா. இவர்களுக்குக் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

உயிரிழந்த நபரை தோண்டி எடுத்த போது

இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30 ஆம் தேதி) இரவு ராஜா வீட்டின் அருகில் உள்ள வரட்டாறு கால்வாய் பகுதியில் உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த ராஜா உடலை வருவாய்த்துறை  மற்றும் காவல் துறையினருக்கு தெரியாமல், அவரது மனைவியின் பேச்சைக் கேட்டு உறவினர்கள் சிலர் ஒன்றிணைந்து கீரைப்பட்டியில் அடக்கம் செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ராஜாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கீரைப்பட்டி வி.ஏ.ஓ சிவக்குமார் அரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், வட்டாட்சியர் கனிமொழி, காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபு ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்ட ராஜாவின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்து விட்டு மீண்டும் புதைத்தனர்.

இந்நிலையில் இன்று ராஜாவின் மனைவி கனகா அரூர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். தொடர்ந்து கனகாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கனகாவின் நடவடிக்கை மீது ராஜாவிற்கு சந்தேகம் வந்துள்ளது. “சந்தேகத்தால் குடித்துவிட்டு மது போதையில் என்னை அடித்துத் துன்புறுத்தி வந்தார். என் மீது சந்தேகப்பட்டுக் கொண்டு 6 மாதமாக வேலைக்குப் கூட போகாமல், வீட்டிலேயே இருந்தார்” என்றுள்ளார்.

கனகா

இதனையடுத்து சம்பவத்தன்று இரவு மது போதையில் வந்த ராஜா, கனகாவை அடித்துத் துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்த கனகா அருகிலிருந்த செங்கல்லால் அவரை தாக்கி, கீழே பிடித்துத் தள்ளியுள்ளார்.

இதில் சுவற்றில் அடிபட்டு ராஜா சுருண்டுவிழுந்துள்ளார். மேலும் ஆத்திரம் தீராமல் ராஜாவின் கழுத்தை நெறித்ததில் அவர் உயிரிழந்து விட்டதாகவும், அவரது உடலை வீட்டிலிருந்து சுமார் 20 அடி தொலைவில் உள்ள வரட்டாறு கால்வாயில் இழுத்துச் சென்று கனகாவே தள்ளியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

உயிரிழந்த ராஜா

இதனைத் தொடர்ந்து கனகா மீது கொலை வழக்கு, தடயங்களை மறைத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

கணவன் சந்தேகப்பட்டதால் மனைவியே கணவனை அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.