தமிழ்நாடு

கோடையில் வரும் பறவைகளுக்கு கூண்டு வைத்து உணவு பரிமாறும் பள்ளி மாணவர்கள்

கோடையில் வரும் பறவைகளுக்கு கூண்டு வைத்து உணவு பரிமாறும் பள்ளி மாணவர்கள்

webteam

உணவு தேடி வரும் பறவைகளுக்கு பள்ளி வளாகத்தில் செயற்கை கூண்டு தயார் செய்து உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து வரும் அரசு பள்ளி மாணவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த பாலவாடி கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி வளாகம் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனால் அங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரக் கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வருகின்றனர்.

பள்ளி வளாகத்திலேயே வனப் பகுதியைபோல பசுமையான மரங்கள் இருப்பதால், பல்வேறு பகுதிகளிலிருந்து வெவ்வேறு வகையான பறவைகள் தினமும் மாலை நேரங்களில் வந்து அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டு செல்கின்றன. ஆனால் கோடை காலங்களில் இந்தப் பகுதியில் ஏற்படும் கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செழிக்காத நிலை உள்ளது. இதனால் பள்ளி வளாகத்திற்கு வரும் பறவைகளுக்கு போதிய அளவு உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில்லை.

இதனால் பறவைகள் வருகையை தக்க வைப்பதற்காக, பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் மாணவர்கள் அட்டைப் பெட்டிகளை வைத்து செயற்கையாக பறவைகளுக்கான கூண்டு தயார் செய்து மரக்கிளைகளில் தொங்கவிட்டுள்ளனர். மேலும், பறவைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை தினமும் மரங்களில் வைத்து வருகின்றனர்.

இவ்வாறு ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை பள்ளி மாணவர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் செயற்கை கூண்டுகள் வைத்து அதற்குரிய தானியங்கள் மற்றும் தண்ணீரை தினமும் வைத்து பராமரித்து வருகின்றனர். இதனால் வறட்சி காலங்களில் கூட, பள்ளி வளாகத்திற்கு வரும் பறவை இனங்கள் வழக்கமாக வந்து செல்கின்றன.