தமிழ்நாடு

தருமபுரி: கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

webteam

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஒட்டிகள் அவதியடைந்தனர்.

கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் தொடர் மழை இருந்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக மழை பொழியவில்லை. இதைத் தொடர்ந்து மழை நின்றதால், பனிப்பொழிய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி, அரூர் நகரம், மொரப்பூர், பெத்தூர், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. காலை 8 மணி வரை நீடித்த இந்த பனி மூட்டத்தால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்தவாறு சென்றன.

இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளானதோடு பொதுமக்களின் இயல்பு வாழக்கையும் பாதிக்கப்பட்டது.