தமிழ்நாடு

தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலையே - நீதிபதி சிங்காரவேலன் கமிஷன் அறிக்கை?

தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலையே - நீதிபதி சிங்காரவேலன் கமிஷன் அறிக்கை?

webteam

தருமபுரி இளைஞர் இளவரசன் தனது காதல் மனைவி திவ்யா தன்னை பிரிந்து சென்றதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலன் ஆணையம், அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் சேர்ந்த பட்டியலின இளைஞர் இளவரசன், அதே பகுதியில் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை காதலித்து கலப்புத்திருமணம் செய்துகொண்டார். இதன் பின்னர் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டதால், சம்பந்தப்பட்ட இரண்டு சமூகத்தினரிடையே வன்முறை வெடித்தது. வீடுகளுக்கு தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறின. நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றது. இறுதியில், பெற்றோர்களுடன் செல்‌ல விரும்புவதாகக் கூறி திவ்யா, தன்னுடைய வீட்டுக்குத் திரும்பினார்.

அதனையடுத்து, கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி தருமபுரி அரசு கலைக் கல்லூரிக்கு பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இறந்த நிலையில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இளவரம் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சிலர் அவரை கொலை செய்துவிட்டு தண்டவாளத்தில் போட்டிருக்கலாம் என்றும் அப்போது இருவித கருத்துக்கள் பேசப்பட்டது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலன் தலைமையில் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டார். 

பல்வேறு கட்ட விசாரணையின் முடிவில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதமே சிங்காரவேலன் ஆணையம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை அளித்துள்ளதாகவும், ஆனால் இந்த அறிக்கை இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சிபிசிஐடியின் விசாரணையின் தரவுகளை வைத்து, சிங்காரவேலன் ஆணையம் இந்த மரணம் தற்கொலை என அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த அறிக்கையில், இளவரசனின் இருபிரேத பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில், சிபிசிஐடி விசாரணையிலும் தற்கொலை செய்துகொண்டதாகவே முடிவு செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இளவரசன் கைகடிகாரம் நின்றுபோன நேரமான 1.20 மணிக்கு குர்லா எக்ஸ்பிரஸ் கடந்து சென்றதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது காதல் மனைவி திவ்யா தன்னை பிரிந்து சென்றதால் மனம் உடைந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் எனவும் சிங்காரவேலன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.