தமிழ்நாடு

விளைநிலத்தில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு - தருமபுரியில் விவசாயி தற்கொலை

ஜா. ஜாக்சன் சிங்

தருமபுரி அருகே விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கேரளாவில் இருந்து தமிழகம் வழியாக கர்நாடகாவுக்கு எரிவாயு கொண்டு செல்ல கெயில் நிறுவனம் குழாய் அமைத்து வருகிறது. தருமபுரி மாவட்டம் இண்டூர் பகுதியில் எரிவாயு குழாய் அமைக்க தொடக்கம் முதலே விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவரின் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தின் வழியாக எரிவாயு குழாய் செல்ல அதிகாரிகள் மற்றும் கெயில் நிறுவன ஊழியர்கள் அளவீடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த கணேசன், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். பின்னர், அவரது உடலை தருமபுரி - ஒகேனக்கல் சாலையில் வைத்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது கெயில் திட்டத்தை சாலை வழியாக செயல்படுத்த வேண்டும்; உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.