தருமபுரி மாரண்டஹள்ளி அருகே கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த சாமனூர் ஜீவா நகரை சேர்ந்த அருணகிரி-சுகுணா தம்பதியினருக்கு, திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் சுகுணா வீட்டில் சாம்பார் செய்த பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு, மாட்டிற்கு தண்ணீர் வைக்க வெளியே சென்றுள்ளார். அப்போது தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்து வந்த அவருடைய ஒன்றரை வயதான, இரண்டாவது மகள் தேன்மொழி (18 மாதம்) நிலை தடுமாறி கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து துடிதுடித்த குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு தாய் சுகுணா ஓடிவந்து குழந்தையை மீட்டு மாரண்டஹள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பிறகு மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மற்றும் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் படுகாயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து மாரண்டஹள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.