தமிழ்நாடு

தாராபுரம்: இருசக்கர வாகனத்தில் தஞ்சமடைந்த பாம்பு – அலறியடித்து ஓடிய பெண்

webteam

தாராபுரத்தில் இருசக்கர வாகனத்திற்குள் இருந்து புஷ் புஷ் என வந்த சத்தம் பாம்பை கண்ட பெண் அலறியடித்து ஓடினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கௌதமி (38). இவர் தின்பண்டங்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகனத்தின் பின் பகுதியில் நெளிந்தவாறு புஷ் புஷ் என சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அலறியடித்து சிறிது தூரம் தள்ளி நின்றார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருசக்கர வாகனத்தின் பின்பகுதியை தட்டிப் பார்த்தனர். அப்போது நான்கு அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு இருசக்கர வாகனத்தின் நடுப்பகுதியில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு கௌதமி தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இருசக்கர வாகனத்தில் கட்டுவிரியன் பாம்பு புகுந்து அட்டகாசம் செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.