தமிழ்நாடு

“விமர்சிப்பவர்கள் ஒரு பொருட்டல்ல” - அத்திவரதர் வைபவ காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு

webteam

விமர்சிப்பவர்கள் ஒரு பொருட்டல்ல என்றும் குறை இருந்தாலும்‌ களத்தில் நின்று அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களுக்கே ஒட்டுமொத்த பெருமையும் வந்து சேரும் என்றும் தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் நாளையுடன் முடிவடைவதை அடுத்து 40 நாள்களுக்கும் மேலாக பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்து டிஜிபி திரிபாதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாதுகாப்பு பணியில் இருந்த ஒவ்வொரு காவலரும் வரலாற்றுடன் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என கூறியுள்ளார். விமர்சனம் செய்பவர்கள் ஒரு பொருட்டல்ல என்றும், கடமை உணர்வுடன் மேலான நோக்கத்திற்காக தன்னை அர்ப்பணிப்பவரே சாதனை வெற்றியை பெறுவார் என்றும் திரிபாதி தெரிவித்துள்ளார்.

மேலும், “நமது நாட்டின் பாதுகாப்பிற்கும், கவுரவத்திற்கும் மற்றும் நலனிற்கும் எப்போதும் ஒவ்வொரு முறையும் முன்னுரிமை தரவேண்டும். தமிழக மக்கள் காவல்துறை மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கும் விதமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.