தமிழ்நாடு

பணியின்போது உயிரிழந்த தீயணைப்புத் துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு வீர வணக்கம்

Sinekadhara

பணியின்போது உயிரிழந்த தீயணைப்புத் துறையினருக்கு வீர வணக்கம் செலுத்தினார் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு. 195ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 33 பேர் பலியாகி உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியா முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தீவிபத்து மற்றும் மீட்பு பணிகளில் தைரியமாக செயல்பட்டு வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

1944ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் தீவிபத்திற்குள்ளானது. இக்கப்பலில் STIKINS என்ற தோராயமாக 1200 கப்பல் வெடிப்பொருட்கள் மற்றும் எண்ணெய் வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக மும்பை தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் விரைந்து ஈடுபட்டனர். வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதிலிருந்த வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியது. அதில் சிக்கி மும்பை தீயணப்புத்த்துறையைச் சேர்ந்த 66 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசால் ஏப்ரல் 14ஆம் தேதி தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இன்று, தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணிகள் துறையில் பணியின்போது உயிர் நீத்தோர்களுக்கு நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு எழும்பூரில் உள்ள தீயணைப்புத்துறை தலைமையகத்தில் நடந்தது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநரும், சட்டம்- ஒழுங்கு டிஜிபியுமான சைலேந்திரபாபு, காவலர் வீட்டு வசதி கழகத்தின் இயக்குநரும், டிஜிபியுமான ஏ.கே.விஸ்வநாதன், தீயணைப்புத்துறை இயக்குநரும் டிஜிபியுமான பிரஜ் கிஷோர் ரவி, தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குநர் விஜய சேகர், இணை இயக்குநர்கள் பிரியா ரவிச்சந்திரன், மீனாட்சி விஜயகுமார் மற்றும் ஓய்வுபெற்ற டிஜிபிக்கள், தீயணைப்புத்துறையினர், வீர வணக்க ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு தீயணைப்புத்துறை துவங்கப்பட்டதிலிருந்து இதுநாள் வரை, அதாவது 1955 ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை 33 தீயணைப்புத்துறையினர் பணியின் போது இறந்துள்ளனர். அவர்களது பெயர் விவரங்களை நினைவு ஸ்தூபியில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்த தீயணைப்புத்துறையினரின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.