கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பும் வகையில் வீடியோ காட்சிகளை வெளியிட்ட யூடியூப் சேனல்களை முடக்கவும், கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்ட வீடியோ பதிவுகளை நீக்கவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கன்னியாமூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்தது தொடர்பாக மாணவியின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பெரும் கலவரம் நிகழ்ந்தது. கலவரத்தைத் தொடர்ந்து ஜூலை 31ஆம் தேதி வரை 141 தடை விதித்து, மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள டிஐஜி பிரவீன் குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராதாகிருஷ்ணன், கிங்க்ஸ்லின், திருமால், முத்து மாணிக்கம், சந்திரமௌலி ஆகிய ஐந்து உயர் அதிகாரிகள் அங்கு நடைபெற்ற வன்முறை தொடர்பாக விசாரணையை தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சமூக வலைத்தளங்களில் கலவரம் தொடர்பான வீடியோக்களை வெளியிடும் நபர்களை கண்டறியவும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான வீடியோ பதிவுகளை வெளியிட்டு கலவரத்தை தூண்டும் வகையில் பொய்யான செய்தியை பரப்பக்கூடிய நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக பொய்யான செய்திகளை பரப்பியும் கலவரத்தை தூண்டக் கூடிய வகைகளில் உள்ள வீடியோக்களை ஒளிபரப்பு செய்த யூடியூப் சேனலை முடக்கவும், வெளியிடப்பட்ட காட்சிகளை நீக்கவும் தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிக்கலாம்: கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்வது தொடர்பாக நீதிமன்றம் புதிய உத்தரவு