தமிழ்நாடு

தேவர் குருபூஜை விழா: அரசியல் பிரமுகர்கள் வருகை – பசும்பொன்னில் பலத்த பாதுகாப்பு

webteam

பசும்பொன்னில் தேவர் குருபூஜையில் பங்கேற்க அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் மரியாதை செலுத்த வரவுள்ள நிலையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை கடந்த 28 ஆம் தேதி யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேக விழா உடன் ஆன்மிக விழா தொடங்கியது

இந்த நிலையில் வரக்கூடிய பொதுமக்களை கண்காணிக்கும் விதமாக கமுதி, பசும்பொன் உள்ளிட்ட பகுதிகளில் 94 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நான்கு ஆதி நவீன ட்ரோன் கேமிராக்கள் பறக்க விடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென் மண்டல ஐஜி தலைமையில் 5 டிஐஜி-கள் 34 எஸ்பி-கள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவர் குருபூஜைக்கு வருபவர்கள் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி வர வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், உதயநிதி எம்.எல்.ஏ உள்ளிடோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் வந்து தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

இதையடுத்து பசும்பொன், கமுதி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.